
சென்னை,
நடிகர் ரவிமோகன் மற்றும் ஆர்த்திக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தன் மனைவியை பிரிவதாக ரவிமோகன் தெரிவித்தார். இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணை கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
இதற்கிடையில், நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் பிரீத்தியின் திருமண விழாவிற்கு பாடகி கெனிஷாவுடன் சென்றிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக போய்க்கொண்டு இருக்கும்நிலையில், ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், "ஒரு வருடமாக, நான் கவசம்போல மவுனத்தை சுமந்து வந்திருக்கிறேன். நான் பலவீனமாக இருந்ததால் அல்ல, என் மகன்கள் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதால்.
18 ஆண்டுகளாக காதல், விசுவாசம், பற்றுதலுடன் நான் யாருக்கு துணைநின்றேனோ அவர், என்னைப் பிரிந்து சென்றது மட்டுமல்லாமல், ஒரு காலத்தில் உறுதியளித்த பொறுப்புகளையும் முற்றிலுமாகத் துறந்துவிட்டார். இப்போது வங்கியின் அறிவிப்பால், எங்களை எங்கள் இல்லத்திலிருந்து வெளியேற்றும் அபாயகரமான நிலை உருவாகியுள்ளது. இதுவும், ஒரு காலத்தில் என்னுடன் இணைந்து அந்த இல்லத்தை கட்டியவரின் உத்தரவின் பேரிலேயே நிகழ்கிறது.
என் இன்ஸ்டாகிராம் பெயர் பற்றி பேசுகிறவர்களுக்கும், அட்வைஸ் செய்பவர்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன். நானும் சட்டமும் முடிவு செய்யும் வரை நான் ஆர்த்தி ரவிதான். வழக்கு முடியும் வரை மீடியாக்கள் என்னை 'முன்னாள் மனைவி' என அழைக்க வேண்டாம்' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
