
ஜெய்ப்பூர்,
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க மத்திய அரசும் தயார் ஆகி வருகிறது. எனவே, எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இருநாடுகளின் எல்லைகளில் உள்ள கிராம மக்கள், பதுங்கு குழிகளை தயார் செய்து வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு, இந்தியா குறித்த ரகசியங்களை, உளவு பார்த்து தகவல் கொடுத்து வந்த நபர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சால்மரில் வசிக்கும் பதான்கான் என்பவரை ராஜஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 1 மாதத்திற்கு முன்பே அவர் விசாரிக்கப்பட்டார். தற்போது தான் முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். பதான்கான் 2013-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று அங்கு புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை அவர் அளித்துள்ளார். பணத்துக்காக அவர் உளவு பார்த்தாக உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.