பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி - என்.ஐ.ஏ. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

3 hours ago 3

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்தசூழலில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முறைப்படி வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. விசாரணையை தொடங்கியது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தாக்குதல் நடைபெற்றபோது சம்பவ இடத்தில் இருந்தவர்கள், தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 2 ஆயிரம் பேரிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடப்படும் தீவிரவாதியான பரூக் அகமது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்பட்டு வந்துள்ளார் என்றும், மற்ற தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய பரூக் அகமது உதவியதாக என்.ஐ.ஏ. சந்தேகிக்கிறது. மேலும் தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 15 பேரை தொடர்ந்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பஹல்காமில் தாக்குதலை நடத்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவுவதில் லஷ்கர்-இ-தொய்பா உயர் தளபதி பரூக் அகமதுவின் வலையமைப்பு முக்கிய பங்கு வகித்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பரூக் அகமது ஓவர் கிரவுண்ட் வொர்க்கர்களை பயன்படுத்தி தாக்குதலுக்கான நெட்வொர்க்கை அமைத்துள்ளார் என்றும், கடந்த 2 ஆண்டுகளில் பரூக்கின் ஸ்லீப்பர் செல் நெட்வொர்க் மூலம் பல பயங்கரவாத செயல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றில், 25 சுற்றுலாப் பயணிகளையும் ஒரு காஷ்மீரியையும் கொன்ற பஹல்காம் தாக்குதல் மிக முக்கியமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தானின் 3 எல்லைகளில் இருந்து பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் அனுப்புவதில் பரூக் முக்கிய பங்கு வகிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article