பரந்தூர் விமான நிலையம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

1 day ago 5

சென்னை,

சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பரந்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து மொத்தமாக 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (டிட்கோ) மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக திட்ட அனுமதிக்காக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.. இதனை பரிசீலித்த ஆணையம் திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலை கடந்த ஏப்ரல் மாதம் வழங்கியது.

இந்த நிலையில், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனையில் தொழில்துறை அமைச்சர், தொழில்துறை செயலாளர் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள், டிட்கோ அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையம் அமைப்பதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை மத்திய அரசு வழங்கிய நிலையில், அதன் கட்டுமான பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article