
புனே,
மராட்டியத்தின் மும்பை நகரில் வில்லே பார்லே பகுதியில் வசித்து வரும் 73 வயது பெண்ணிடம் கடந்த திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைக்கு இடைப்பட்ட நாட்களில் சைபர் குற்றவாளிகள் சிலர் தொடர்பு கொண்டுள்ளனர்.
அவர்கள் தங்களை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதி என அடையாளம் காட்டி பணமோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில், வாட்ஸ்அப் வழியே தொலைபேசியில் பேசிய மர்ம நபர், தன்னை டிராய் அதிகாரி என கூறியதுடன், அந்த பெண்ணிடம் நீங்கள் முறையற்ற பணபரிமாற்றத்தில் ஈடுபட்டு உள்ளீர்கள் என கூறியிருக்கிறார். மற்றொரு நபர், தன்னை போலீஸ் அதிகாரி என கூறிக்கொண்டு, மோசடி வழக்கில் விசாரணையில் சிக்கிய தொழிலதிபருடன் உங்களுக்கு தொடர்பு உள்ளது என அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
அதனால், உங்களை டிஜிட்டல் கைது செய்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, உங்களை கைது செய்வதில் இருந்து தவிர்க்க, நீதிபதி ஒருவர் உதவுவார் என வீடியோ காலில் அந்நபர் கூறியுள்ளார்.
இந்த வகையில், அந்த பெண்ணை ரூ.2.89 கோடி பணபரிமாற்றம் செய்ய வைத்திருக்கிறார். இதன்பின்னரே, மோசடியில் சிக்கி இருக்கிறோம் என உணர்ந்த அந்த பெண் சைபர் போலீசாரை தொடர்பு கொண்டு விவரங்களை கூறியிருக்கிறார்.
இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சைபர் போலீசார் துரித கதியில் விசாரணை மேற்கொண்டு, ரூ.2.89 கோடியில் ரூ.1.29 கோடியை மீட்டுள்ளனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.