
பெர்லின்,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மகுவா மொய்த்ரா (வயது 50). எம்.பி.யான இவருக்கும் பிஜு ஜனதா தள கட்சியின் எம்.பி.யான பினாகி மிஸ்ராவுக்கும் ஜெர்மனியில் வைத்து திருமணம் நடந்துள்ளது.
இதனை மொய்த்ரா உறுதிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்பு, வெளிநாட்டில் பார்த்த வேலையை உதறி விட்டு அரசியலில் இணைந்த அவர், முதலில் டென்மார்க் நாட்டை சேர்ந்த பைனான்சியரான லார்ஸ் பிரார்சனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் விவாகரத்து பெற்றனர்.
இதன்பின்னர், வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேகத்ராய் என்பவருடன் உறவுமுறையில் இருந்த மொய்த்ரா, 2023-ம் ஆண்டு டிசம்பரில் பரிசு, பணம் ஆகியவற்றை பெற்ற விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளானார். இதனால், மக்களவையில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அவருக்கு எதிராக புகார் அளித்ததே ஜெய் ஆனந்த் என தெரிய வந்து மொய்த்ரா அதிர்ச்சியானார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட மொய்த்ரா நாடாளுமன்றத்தில், பா.ஜ.க.வுக்கு எதிராக கடுமையாக பேசி பரபரப்பு ஏற்படுத்தியவர்.
இந்நிலையில், பினாகியை அவர் கரம் பிடித்துள்ளார். இதுபற்றிய புகைப்படம் ஒன்றையும் மொய்த்ரா அவருடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். பினாகிக்கு இதற்கு முன் நடந்த திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த தம்பதிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஜாதவ்பூர் தொகுதி எம்.பி. சாயோனி கோஷ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு மொய்த்ரா நன்றி தெரிவித்து கொண்டார்.