*சிவகங்கை ஜிஹெச்சில் பரபரப்பு
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 மாணவ, மாணவிகள் பயிற்சி மருத்துவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கல்லூரிக்கு பின்புறம் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் விடுதிக்குச் சென்ற பயிற்சி பெண் மருத்துவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் முகத்தில் துணியை போர்த்தி சரமாரியாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு சக மருத்துவ மாணவர்கள் ஓடி வந்தனர். உடனே மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
டீன் சத்தியபாமா அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்பி ஆசிஷ் ராவத் மற்றும் போலீசார், பெண் பயிற்சி மருத்துவரை தாக்கிய மர்ம நபர் யார், வழிப்பறிக்காக வந்த நபரா அல்லது தனிப்பட்ட காரணமாக தாக்குதல் நடத்தினாரா என்பது குறித்து சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் பயிற்சி மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், கல்லூரி பின்புறம் மற்றும் விடுதி வளாகங்களில் மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள், சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படவில்லை எனக்கூறி, பயிற்சி மருத்துவர்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
The post பயிற்சி பெண் மருத்துவர் மீது மர்ம நபர் தாக்குதல் appeared first on Dinakaran.