பயணிகள் பட்டாசு எடுத்துச் செல்ல தடை: ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

3 months ago 11

 

ஈரோடு, அக்.29: பயணிகள் பட்டாசு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டு வருகின்றனர். வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இதையடுத்து, ஈரோடு ரயில்வே போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக பயணிகளின் உடமைகளை தீவிர பரிசோதனை செய்து, அதன் பின்னரே ரயில் நிலையத்துக்குள் அனுமதித்து வருகின்றனர்.  ரயில் பயணத்தின் போது பட்டாசுகள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் பட்டாசுகள் எதையும் எடுத்துச் செல்கின்றனரா ? என ரயில்வே போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி, ஈரோடு வந்த ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும் போலீசார் ஏறி பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.

அப்போது, பயணிகளிடம் ரயில் பயணத்தின் போது பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது என்றும், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தினர். மேலும், ரயிலில் பயணம் செய்யும் போது, பெண்கள் அதிக அளவில் நகைகளை அணிந்து செல்லக்கூடாது என்றும், இரவு நேரத்தில் ஜன்னலோரம் படுத்து தூங்க கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

The post பயணிகள் பட்டாசு எடுத்துச் செல்ல தடை: ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article