பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதியுதவி - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

6 hours ago 1

காந்திநகர்,

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் வெற்றி பெற்ற நிலையில் குஜராத் மாநிலம் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

நமது வீரமிக்க வீரர்களை பாராட்ட வந்துள்ளேன். காயமடைந்த நமது வீரர்களின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் கண்காணிப்பின் கீழ் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் சின்னம் புஜ்.

மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்க தொடங்கி விட்டது. சர்வதேச நிதி ஆணையம் கொடுத்த நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வழங்கி உள்ளது. பயங்கரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு ரூ.14 கோடி நிதியை வழங்கி உள்ளது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாத அமைப்புகளின் கையில் செல்ல வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானுக்கு நிதி வழங்கியதை சர்வதேச நிதி ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை இந்தியா முழுமையாக அழிக்கும் வரை ஓயாது.

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை வெறும் டிரெய்லர்தான். இனிமேல்தான் படமே. பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை நசுக்க 23 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னுமும் முடிவடையவில்லை என்றார்.

Read Entire Article