படம் தயாரிக்க வாங்கிய கடனை பேரன் திரும்ப தராத விவகாரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

3 hours ago 1

சென்னை: ஜகஜால கில்லாடி படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடன்தொகையை திருப்பி தரவில்லை. இதையடுத்து, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தரான நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிப்பதற்காக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்குமாறு கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார். உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ஈசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் மத்தியஸ்தர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடையவில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விடுமாறு உத்தரவிடக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. எனவே, சென்னை தி.நகரில் உள்ள ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது. இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஈசன் புரடக்‌ஷன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியும் எதிர் மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும். இந்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார். வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

 

The post படம் தயாரிக்க வாங்கிய கடனை பேரன் திரும்ப தராத விவகாரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article