நெல்லை டவுனில் ஓய்வு பெற்ற எஸ்ஐ வெட்டிக்கொலை; இட பிரச்னையில் இடையூறாக இருந்ததால் வெட்டி கொன்றோம்: முக்கிய குற்றவாளியின் சகோதரர், மைத்துனர் வாக்குமூலம்

22 hours ago 2

நெல்லை: இடப்பிரச்னையில் இடையூறாக இருந்ததால் நெல்லை டவுனில் ஓய்வு பெற்ற எஸ்ஐயை வெட்டி கொன்றதாக முக்கிய குற்றவாளியின் சகோதரர், மைத்துனர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நெல்லை டவுன் தொட்டி பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (60). ஓய்வு பெற்ற எஸ்ஐ. இவர் டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்தார். கடந்த 18ம் தேதி அதிகாலை காட்சி மண்டபம் பகுதியில் சென்றபோது 3 பேர் கும்பல் இவரை சரமாரி வெட்டி கொலை செய்தது. விசாரணையில் தொட்டி பாலம் தெரு பகுதியில் உள்ள இடம் தொடர்பான பிரச்னையில் அதே பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (எ) முகமது ெதளபிக், அவரது சகோதரர் கார்த்திக் மற்றும் முகமது தௌபிக்கின் மனைவி நூருநிஷாவின் சகோதரர் அக்பர் ஷா ஆகியோர் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக முகமது தெளபிக்கின் மனைவி நூரு நிஷா மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தில் கார்த்திக், அக்பர்ஷா நெல்லை கோர்ட்டில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த முகமது தௌபிக்கை, ரெட்டியார்பட்டி பகுதியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதனிடையே தலைமறைவான நூருநிஷாவை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனிப்படையினர் தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஜாகீர்உசேன் புகாரை முறையாக விசாரிக்காத, இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் செந்தில் குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோர்ட்டில் சரணடைந்த கார்த்திக், அக்பர் ஷா ஆகியோரை நேற்று 2 நாட்கள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் விசாரணை முடிந்து இன்று மாலை ஜேஎம்.4 மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்துகின்றனர். இதற்கிடையில் இருவரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், ‘நெல்லை டவுனில் உள்ள இடத்தை நாங்கள் அனுபவிக்க ஜாகிர்உசேன் பிஜிலி தடையாக இருந்தார். இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து நாங்கள் 3 பேரும் சேர்ந்து வெட்டி கொன்றோம்’ என்றனர்.
இந்த வழக்கில் நூரு நிஷாவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரம் அவர் நெல்லை அல்லது அண்டை மாவட்டங்களில் தனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியிருக்கலாம் என்ற கோணத்திலும் மற்றொரு தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

The post நெல்லை டவுனில் ஓய்வு பெற்ற எஸ்ஐ வெட்டிக்கொலை; இட பிரச்னையில் இடையூறாக இருந்ததால் வெட்டி கொன்றோம்: முக்கிய குற்றவாளியின் சகோதரர், மைத்துனர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Read Entire Article