
நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வடக்கு பொன்னாக்குடி, தெற்கு தெருவை சேர்ந்த அருணாச்சலம் (வயது 48) என்பவருக்கும் அவரது அண்ணன் மாரிமுத்து என்பவரின் மகன் இசக்கிமுத்து (28) என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனை மனதில் வைத்துக் கொண்டு நேற்று முன்தினம் (28.4.2025) அருணாச்சலம் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இசக்கிமுத்து, அருணாச்சலத்திடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி, இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அருணாச்சலத்தின் மகளான செல்வவேனி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்து, மாரிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி (50) ஆகிய 2 பேரையும் தேடி வந்த நிலையில், நேற்று (29.4.2025) அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.