சென்னை: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2002-2003 கொள்முதல் பருவத்தில் இருந்து அக்டோபர் முதல் நாள் தொடங்கி நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகளின் நலன் கருதி செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450 என்ற விலையிலும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405 என்ற விலையிலும் 1.9.2024 முதல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 01.09.2024 முதல் 04.02.2025 வரை, தமிழ்நாடு முழுவதும் 2,444 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் 1,44,248 விவசாயிகளிடம் இருந்து 10,41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை ரூ.2,247.52 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட, இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 4.2.2024 வரை 7,42,335 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் 4.2.2025 வரை 10,41,583 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 2,99,248 மெட்ரிக் டன் அதிகமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post நெல்லுக்கான தொகை ரூ.2,247 கோடி விவசாயிகளுக்கு பட்டுவாடா தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் 10 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டியது: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.