
சென்னை,
தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.
இத்தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி கடந்த 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் நேற்று தொடங்கியது. neet.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.