
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் திமுக பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?
"ரகசியம் இருக்கிறது, ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள்" என்று வாய் சவடால் பேசியதெல்லாம் எங்கே போனது? வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் எங்கே போனது?
உங்களுடைய தேர்தல் அரசியலுக்கான ஒற்றைப் பொய்யால் மட்டுமே 21 மாணவ மாணவியரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் எத்தனை பிள்ளைகள் மு.க.ஸ்டாலின் அவர்களே? உங்களுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா?
"நீட் ஒழிய வேண்டும் என்றால் '2.ஓ' வர வேண்டும்" என்று கூச்சமின்றி திமுக-வினர் 2026ல் வாக்கு கேட்கும் போது, "உரிய மரியாதையுடன்" மக்கள் பதில் அளிப்பார்கள்! இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.