
டெல்லி,.
இந்தியாவில் பெருநகரங்கள் முதல் சிறுகிராமங்கள் வரை யுபிஐ மூலம் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. தினமும் கோடிக்கணக்கான ரூபாய் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் யுபிஐ சேவை இன்று பாதிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் யுபிஐ சேவையில் பாதிப்பு ஏற்பட்டு பயனாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கம் ஏற்பட்டுள்ளது.
கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதால் பயனாளர்கள் அவதியடைந்தனர். இந்த முடக்கம், உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது, மின்கட்டணம் செலுத்துவது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு யுபிஐயை நம்பியிருக்கும் ஏராளமான மக்களை வெகுவாக பாதித்தது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த பிரச்சினை நிலவி வருகிறது. தொழில்நுட்பக்கோளாறு காரணமாக யுபிஐ சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.