நடிகை விஜயலட்சுமியை 7 முறை கருக்கலைக்க வைத்த விவகாரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன்: நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வரும்படி உத்தரவு

3 hours ago 1

சென்னை: நடிகை விஜயலட்சுமியை 7 முறை கருக்கலைப்பு செய்ய வைத்த விவகாரம் மற்றும் அவரை திருமணம் செய்தாரா என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாளை மறுநாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை என்னுடன் உறவில் இருந்தார். இதனால் 7 முறை கருக்கலைப்பு செய்துள்ளேன். மதுரை கோயிலில் இருவரும் திருமணம் செய்வதற்கு அடையாளமாக மாலை மாற்றிக் கொண்டோம்.

சென்னையில் மட்டுமல்லாது பெங்களூரிலும் குடும்பம் நடத்தினோம். ஆனால் கடைசியில் என்னை திருமணம் செய்யாமல், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்திருந்தார்.. இது குறித்து வளசரவாக்கம் போலீசில் அதிமுக ஆட்சிக்காலத்தில் அவர் புகார் செய்திருந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார், சீமானிடம் விசாரணை நடத்தவோ, அவரை கைது செய்யவோ முயற்சிக்கவில்ைல. அதேநேரத்தில் வழக்கை முடிக்கவும் இல்லை. இந்தநிலையில் தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீசில் சீமான் மீண்டும் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கயல்விழியை திருமணம் செய்வதற்கு முன்னரே விஜயலட்சுமியை, சீமான் திருமணம் செய்திருந்தாரா? 7 முறை கருக்கலைப்பு செய்ய வைத்தாரா? அவர்கள் இருவருக்கும் என்ன உறவுமுறை இருந்தது? பாலியல் புகாரை மிரட்டி வாபஸ் வாங்க வைத்தாரா என்பது குறித்தெல்லாம் விசாரித்து 12 வாரத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவைத் தொடர்ந்து, பெங்களூரில் தங்கியிருந்த விஜயலட்சுமியிடம், வளசரவாக்கம் மகளிர் போலீசார் சென்று வாக்குமூலம் பெற்றனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமானிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சீமான் நாளை மறுநாள் (27ம் தேதி) போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் மகளிர் போலீசார் நேற்று இரவு சம்மன் அனுப்பியுள்ளனர். சீமானிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். சீமானிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து சம்மன் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நடிகை விஜயலட்சுமியை 7 முறை கருக்கலைக்க வைத்த விவகாரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன்: நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வரும்படி உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article