நகைப்பட்டறையில் ரூ.17 லட்சம் தங்கக்கட்டிகள் திருட்டு - தொழிலாளி கைது

3 hours ago 1

கோவை,

கோவை கெம்பட்டிகாலனி பாளையம்தோட்டம் பகுதியை சேர்ந் தவர் சரவணமூர்த்தி (வயது 40). இவர் வீட்டின் ஒரு பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இங்கு செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த கார்த்தி (30) என்பவர் 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று சரவணமூர்த்தி, 200 கிராம் தங்கக்கட்டிகளை கார்த்தியிடம் கொடுத்து ஆபரணமாக செய்யுமாறு கூறி உள்ளார். அதை வாங்கி சென்ற அவர், வெகு நேரமாகியும் பட்டறைக்கு திரும்ப வில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்து உள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த சரவணமூர்த்தி, அவரை தேடி வீட்டுக்கு சென்றார். அங்கும் அவர் இல்லை. இதனால் அவர், தங்கக்கட்டிகளை திருடி விட்டு மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை வீதி போலீசார் கார்த்தி மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கார்த்தியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது அவர் புதுச்சேரியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

உடனே தனிப்படை போலீசார் புதுச்சேரிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த கார்த்தியை மடக்கிப்பிடித்து கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Read Entire Article