
ஐதரபாத்,
தெலங்கானாவிலும் தொழிலாளர்களின் பணி நேரத்தை 10 மணி நேரம் வரை உயர்த்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தெலங்கானா அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நாளொன்றுக்கு 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரம் ஆக அதிகரிக்கப்படுகிறது. எனினும், வாராந்திர வேலை நேரம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதன்படி, 48 மணி நேர வரம்பை மீறாத வகையில் இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா அரசின் 'தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் துறையின்' முதன்மைச் செயலர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறைந்தபட்சம் 6 மணி நேர வேலை நேரத்துக்கிடையில் 30 நிமிட இடைவெளி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் 10 மணி நேர வேலை என்ற உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. இதனை பின்பற்றி, தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் அதேபோன்ற ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.