
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் பெரும் முயற்சியால் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 176 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து 31 மாவட்டங்களில் இருக்கும் 113 கோவில்களில் நாளை (திங்கட்கிழமை) காலை கும்பாபிஷேகம் நடக்கிறது.
அந்தவகையில் நாளை நடக்கும் கும்பாபிஷேகத்தில் 3 ஆயிரத்து 207-வது கோவிலாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதுதவிர, கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை இசக்கியம்மன் கோவில், மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேசுவர சாமி கோவில், காஞ்சீபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவில், தென்காசி மாவட்டம் கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சின்னமலை யோக ஆஞ்சநேய சாமி கோவில் உள்பட 113 கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது.
மேற்கண்ட தகவல்களை அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.