பழநி: பழநி கோயில் தைப்பூச திருவிழாவில் 9 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த பிப்.5ம் தேதி துவங்கி பிப்.14ம் தேதி வரை என 10 நாள் நடைபெற்றது. இத்திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘திருவிழாவின் முதல் நாளில் சுமார் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து வந்த நாட்களில் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதிலும் 3ம் நாளில் இருந்து 7ம் நாள் வரையிலான 4 நாட்களில் தினசரி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். குறிப்பாக திருக்கல்யாணம் நடந்த நாளில் 1 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்களும், தேரோட்டம் நடந்த 7ம் நாளில் 2 லட்சத்து 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மொத்தத்தில் தைப்பூச திருவிழா நடந்த 10 நாட்களில் சுமார் 9 லட்சம் பக்தர்கள் பழநி கோயிலில் தரிசனம் செய்தனர்’’ என்றனர்.
The post தைப்பூச திருவிழா: 9 லட்சம் பக்தர்கள் பழநியில் தரிசனம் appeared first on Dinakaran.