காஞ்சிபுரம்: தேவரியம்பாக்கம் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமையான அரிய புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோயிலில் இருந்த இந்த சிலை 900 ஆண்டு பழமையானது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாலாஜாபாத் அருகே உள்ள தேவரியம்பாக்கத்தில் வெண்மை நிற பளிங்குக் கல்லால் ஆன அமர்ந்த நிலையில் உள்ள புத்தரின் சிலை பெருமாள் கோயிலில் பழைய பொருட்கள் ஓரம் கட்டி வைக்கப்பட்ட இடத்தில் இருந்தது.
இந்தச் சிலையில் உள்ள புத்தரின் கண்கள் மூடிய நிலையில்தியானத்தில் உள்ளவாறு அமைக்கப்பட்டிருந்தன.ஓரடி உயரமுள்ள இச்சிலையில் காதுகள் இரண்டும்தோள்வரை நீண்டுள்ளன. மூக்கு சற்று சேதமடைந்த நிலையிலும் சுருள் சுருளான தலைமுடியுடனும், இடப்புறத் தோள்பட்டை முதல் இடுப்பு வரை ஆடையுடனும், பின்புற மேலாடை நேர்த்தியாகத் தெரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.