ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஸ்ரீ சைலம் அணை சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அம்ராபாத்தில் ஸ்ரீசைலம் அணை உள்ளது. இந்த அணையில் புதிதாக சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பணிகளுக்கு இடையே தோமலபென்ட்டா என்ற பகுதியில் பிப்., 22ல் திடீரென சுரங்க மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டதால் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டோர் தப்பிய நிலையில்,
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த திட்ட இன்ஜினியர்கள் மனோஜ் குமார், கள பொறியாளர் ஸ்ரீநிவாஸ், ஜார்க்கண்ட்டை சேர்ந்த ஊழியர்கள் சந்தீப் சாஹு, ஜக்தா ஜெஸ், சந்தோஷ் சாகு, அனுஜ் சாகு, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆபரேட்டர் சன்னி சிங், பஞ்சாபைச் சேர்ந்த ஆபரேட்டர் குர்பிரீத் சிங் ஆகிய 8 பேர் சிக்கினர்.
அவர்களை மீட்கும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், ராணுவம், கடற்படை கமாண்டோக்கள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 2023ம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவை சேர்ந்த 6 வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டது. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை தேடுவதற்காக அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மற்றும் எண்டோஸ்கோபி கருவிகள் வரவழைக்கப்பட்டன. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த மோப்ப நாய்களும் மீட்பு பணியில் களமிறக்கப்பட்டன.
8 தொழிலாளர்கள் உயிருடன் இருக்க மிக குறைவான வாய்ப்பே உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மண் சரிவில் சிக்கிய 8 பேரும் ஒரு வாரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில் 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடைந்த இயந்திரத்தின் அடியில் சிக்கி மரணம் அடைந்தது உறுதியாகி உள்ளது. அந்த பகுதியில் உள்ள இடற்பாடுகளை அகற்றி அவர்களின் உடல்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
The post தெலுங்கானா சுரங்க விபத்து.. மண் சரிவில் சிக்கிய 8 தொழிலார்களும் உயிரிழப்பு! appeared first on Dinakaran.