தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை எதிர்த்து வழக்கு: நிர்வாகிகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

4 hours ago 2

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க சட்ட திட்டத்தின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த தீர்மானத்தை செல்லாது என்றும் சட்ட விரோதமானது என்றும் அறிவிக்க கோரி நம்பிராஜன் என்ற உறுப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழில், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்த எந்த குறிப்பு இடம்பெறவில்லை. நடிகர் சங்க கட்டிட பணிகளை சுட்டிக்காட்டி பதவி காலத்தை நீட்டிக்க முடியாது. புதிய நிர்வாகிகள் கட்டுமான பணிகளை தொடர்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்திற்கும் விரோதமானது.

எனவே, நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்துமாறு உத்தரவிட வேண்டும். தேர்தல் நடத்தும் வரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, தென்னிந்திய நடிகர் சங்கம், அதன் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் ஜூன் 4ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை எதிர்த்து வழக்கு: நிர்வாகிகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article