
தென்காசி காசிவிசுவநாதர் கோவில் 14-ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இந்த கோவில் தொல்லியல்துறை மேற்பார்வையில் உள்ளது.
இதனிடையே, கோவில் செயல் அலுவலரின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டர்களில் மண் அள்ளப்பட்டது. இதனால் கோவில் கட்டிடம் பாதிக்கப்பட்டுள்ளது. காசிவிசுவநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023-ம் ஆண்டு ஆலோசனை நடத்தப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை. குறிப்பாக, கோவிலின் தூண்களை சீரமைக்கவில்லை. மழைநீர் கசிவு சரிசெய்யப்படவில்லை.
கோவிலை புனரமைக்க ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்திருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதற்கிடையே வரும் 7-ந்தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை, புனரமைப்பு பணிகளை முழுமையாக முடிக்கும்வரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை, காசிவிசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதித்தது. மேலும், கோவிலில் நடந்த புனரமைப்பு பணிகளை வக்கீல் கமிஷனர் தலைமையில் ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நிறைவடைந்து, யாகசாலை பூஜைகள் துவங்கிவிட்டன. இந்த சமயத்தில் கும்பாபிஷேகத்தை தடை செய்வது சரியாக இருக்காது என்று வாதிட்டார். மேலும், கோவில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. கும்பாபிஷேகத்தை நிறுத்துவதற்கான எந்த தேவையும் இல்லை. ஐ.ஐ.டி. குழு ஆய்வு செய்யப்பட்டும் என்று வாதிட்டார்.
அரசு தரப்பு வாதத்தை ஏற்றுகொண்ட ஐகோர்ட்டு மதுரைக்கிளை, தென்காசி காசிவிசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியது.