*கடத்த முயன்ற வாலிபர் கைது *வேன், படகு பறிமுதல்
தூத்துக்குடி : தூத்துக்குடி இனிகோ நகர் ஏலக்கூடம் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலை மூடைகள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் எஸ்ஐக்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், எஸ்எஸ்ஐ ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், பழனி பாலமுருகன் உள்ளிட்டோர் நேற்று அதிகாலையில் தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் ஏலக்கூடம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வந்த டெம்போ டிராவலர் வேனில் இருந்து இருவர் பீடி இலை மூட்டைகளை கடலில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகில் ஏற்ற முயன்றனர்.
உடனடியாக அவர்களை போலீசார் சுற்றி வளைக்கவே ஒருவர் தப்பியோடினார். மற்றொருவர் போலீசாரிடம் சிக்கினார்.அங்கு நின்றிருந்த வேனை சோதனையிட்ட போது, அதில் தலா 30 கிலோ எடை கொண்ட ‘கட்டிங்’ பீடி இலை 29 மூட்டைகளும், 14 மூட்டைகளில் பீடி இலைகளும் என மொத்தம் 43 பீடி இலை மூட்டைகள் இருந்துள்ளன. இதன் மொத்த எடை 1.29 டன் ஆகும்.
பீடி இலை மூட்டைகள், வேன் மற்றும் படகை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த போரன்ஸ் மகன் ராபின்ஸ்டன் (25) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். தப்பியோடிய பட்டுராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.
பிடிபட்ட பீடி இலைகளின் இலங்கை மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். பீடி இலை மூட்டைகள், வேன், படகு மற்றும் பிடிபட்ட வாலிபரை கியூ பிரிவு போலீசார், சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மற்றொரு சம்பவம்: ஆத்தூர் அருகே ஜெயராமச்சந்திரபுரம் பகுதியில் கியூ பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக இறக்கி வைக்கப்பட்டிருந்த தலா 30 கிலோ எடை ெகாண்ட 60 மூட்டை பீடி இலை மூடைகளை கைப்பற்றினர். 1.8 டன் எடை கொண்ட இந்த பீடி இலைகளின் இலங்கை மதிப்பு ரூ.45 லட்சம் ஆகும். இந்த பீடி இலைகளும் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
The post தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.80 லட்சம் பீடி இலை சிக்கியது appeared first on Dinakaran.