தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செந்தூர் கோயில் யானை பாகன், உறவினர் குடும்பத்திற்கு தலா ₹2 லட்சம்

2 months ago 6

திருச்செந்தூர், டிச.3: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் உள்பட இருவர் குடும்பத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தலா ₹2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கி ஆறுதல் கூறினார். திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோயிலில் கடந்த நவ.18ம் தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இதையடுத்து வனத்துறை மற்றும் கால்நடைத்துறையின் தீவிர கண்காணிப்பில் யானை உள்ளது. கடந்த 24ம் தேதி இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயிரிழந்த யானை பாகன் உதயகுமார் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஆறுதல் கூறினார்.

அப்போது முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹2 லட்சம், திருக்கோயில் நிதியில் இருந்து ₹5 லட்சம் மற்றும் தக்கார் அருள்முருகன் சார்பில் ₹3 லட்சம் என மொத்தம் ₹10 லட்சத்திற்கான காசோலைகளை உதயகுமாரின் மனைவி ரம்யா மற்றும் மகள்களிடம் வழங்கினார். சிசுபாலன் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக தலா ₹2 லட்சம் மற்றும் தக்கார் அருள்முருகன் சார்பில் ₹3 லட்சம் என மொத்தம் ₹5 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். இந்நிலையில் நேற்று காலை திருச்செந்தூர் வஉசி தெருவில் உள்ள யானை பாகன் உதயகுமார் இல்லத்திற்கு மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது பாகன் உதயகுமார் மனைவி ரம்யாவிடமும், சிசுபாலன் மகன் அர்ஜூனனிடம் கட்சி சார்பில் தலா ₹2 லட்சம் நிதியை வழங்கினார். அப்போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், டிஎஸ்பி மகேஷ் குமார், திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், இன்ஸ்பெக்டர் கனகராஜ், திமுக வர்த்தக அணி மாநில இணை செயலாளர் உமரிசங்கர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், திமுக நகர செயலாளர் வாள் சுடலை, கவுன்சிலர்கள் சோமசுந்தரி, சுதாகர், செந்தில்குமார், முத்துகிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் பொன்முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செந்தூர் கோயில் யானை பாகன், உறவினர் குடும்பத்திற்கு தலா ₹2 லட்சம் appeared first on Dinakaran.

Read Entire Article