
நியூயார்க்,
துருக்கியில் நேட்டோ வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ அந்நாட்டுக்கு பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில், நேட்டோ நட்பு நாடுகள் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, துருக்கிக்கு ரூ.2,599 கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. ரூபியோ துருக்கியில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அவர், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அடுத்து, இஸ்தான்புல் நகருக்கு அவர் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ரஷியா மற்றும் உக்ரைனிய அதிகாரிகளிடம் போர் நிறுத்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு கழகம் வெளியிட்ட செய்தி ஒன்றில், ரூ.1,923 கோடி மதிப்பிலான 53 ஏ.ஐ.எம்.-120சி-8 ரக நவீன நடுத்தர ரக ஏவுகணைகளையும், ரூ.676 கோடி மதிப்பிலான 60 பிளாக் 2 ஏவுகணைகளையும் வழங்கும்படி துருக்கி எங்களிடம் கேட்டு கொண்டுள்ளது என தெரிவித்து உள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2,599 கோடி என்ற அளவில் ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்து உள்ளது. எனினும், அமெரிக்க நாடாளுமன்றத்திடம் இருந்து இறுதி ஒப்புதலை பெற வேண்டியுள்ளது.
துருக்கி, தன்னுடைய ராணுவத்தில் உள்ள ஆயுதங்களை நவீனமயப்படுத்தும் விரிவான முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. 2019-ம் ஆண்டில் ரஷிய தயாரிப்பான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை துருக்கி வாங்கியது. இதனால், அமெரிக்காவுடன் உரசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, துருக்கி மீது தடை விதித்த அமெரிக்கா, எப்-35 ஜெட் போர் விமான திட்டத்தில் இருந்து துருக்கியை நீக்கியது.