
புதுடெல்லி,
கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த மாதம் (ஜூலை) 6 மற்றும் 7-ந்தேதிகளில் பிரேசிலில் நடக்கிறது. இந்த அமைப்பின் உறுப்பு நாடான இந்தியாவுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதை ஏற்று மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் பிரேசில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பயணத்துடன் மேலும் 4 நாடுகளில் அவர் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். அதன்படி கானா, டிரினிடாட்-டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த பயணம் குறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் உலகளாவிய தெற்கு நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடி டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, கானா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.