
புதுடெல்லி,
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 4-ந் தேதி நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு மையத்தில் அத்தேர்வு எழுதிய ஒரு மாணவர், டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ''தேர்வு மைய நுழைவாயிலில் இருந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு கருவி செயல்படாததால், தேர்வு தொடங்க 5 நிமிடம் இருந்தபோதுதான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். மேலும், தேர்வு மைய சூப்பிரண்டுக்கு அனுமதி கடிதம் எழுதுமாறு நிர்பந்திக்கப்பட்டேன். இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். இதற்காக கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரதிபா எம்.சிங், மனுவுக்கு பதில் அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், தேர்வு மைய கண்காணிப்பு கேமரா காட்சிகள், இதர பதிவேடுகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு உத்தரவிட்டார்.