திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் - பாமக பொதுச்செயலாளர்

1 month ago 8

சென்னை,

தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது பேசும்பொருளாகியுள்ளது. மறுபுறம் தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றான பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, தானே தலைவராகப் பொறுப்பேற்பதாக பாமகவின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் பாமகவின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். இது பாமக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பெரும் அதிர்ச்சி அளித்தது. ராமதாஸின் ஆலோசனை இல்லாமல் அன்புமணி கட்சிக்குள் தன்னிச்சையாக முடிவெடுத்து வந்ததால் ராமதாஸ் இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ராமதாஸின் இந்த முடிவுக்கு பாமக பொருளாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம்." என பதிவிட்டு இருந்தார்.

இந்தநிலையில், ராமதாஸ் முடிவை விமர்சித்த பொருளாளர் திலகபாமாவை கண்டித்து பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் வெளியிட்ட அறிக்கையில்,

மருத்துவர் ராமதாஸின் முடிவை விமர்சித்த திலகபாமா பாமகவில் இருந்து வெளியேற வேண்டும். திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர், பாமகவின் கொள்கை கோட்பாடுகள் பற்றி திலகபாமாவிற்கு ஒன்றும் தெரியாது.

அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு. நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியில் இருந்து வெளியேறி விடுவதுதான் அவருக்கு நல்லது. பாமகவை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி திலகபாமா. போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என எதிலும் கலந்து கொள்ளாதவர் திலகபாமா என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article