
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலுக்கு வருகை தரும் பெரும்பாலான பக்தர்கள் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் நடந்து கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதில் பவுர்ணமி வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி மறுநாள் 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.08 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
ஆனி மாதத்திற்கான பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. குரு பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும், அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பவுர்ணமி கிரிவலம் செல்ல வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.