
தேனி,
தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பதிவு செய்து, 30.6.2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.900, மேல்நிலை வகுப்பு தேர்ச்சியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது. மாற்றுத்திறனாளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகள் எனில் ரூ.1,000 ஆயிரம் என 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். என்ஜினீயரிங், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித்தொகை பெற முடியாது. தகுதியுள்ள நபர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பெற்றும் பூர்த்தி செய்து அளிக்கலாம்.