திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகள் மாற்றம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

4 hours ago 1

சென்னை: தொழிலதிபர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐயின் புலன் விசாரணயில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் சிபிஐயிடமிருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிபிசிஐடி டிஜிபி கண்காணிப்பில் தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் உள்ளடக்கிய, சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.) நியமித்து உத்தரவிட்டது. இந்த சிறப்பு புலனாய்வு குழு சென்னை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக காவல் துறையின் சார்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி, இந்த வழக்கில் பல்வேறு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கொலைக்கான உள்நோக்கங்களும் ஆராயப்பட்டு புலன் விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக மாற்றப்பட்டாலும் தொடர்ந்து தொய்வின்றி புலன் விசாரணை நடந்து வருகிறது. தற்போது அவர் கடலூர் மாவட்ட எஸ்.பியாக பணிமாற்றம் செய்திருப்பதால் புலன் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக திருச்சி அல்லது திருச்சி அருகிலுள்ள காவல்துறை அதிகாரிகளை புலன் விசாரணை அதிகாரிகளாக நியமித்தால் வழக்கின் புலன் விசாரணைக்கு எளிதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தர் மோகன், கடலூருக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஜெயக்குமார் எஸ்.பி.க்கு மாற்றாக திருச்சி டிஐஜி வருண்குமார், தஞ்சாவூர் எஸ்.பி ஆர்.ராஜாராம் ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள், ஏற்கெனவே இருக்கக்கூடிய சிறப்பு புலனாய்வு அதிகாரிகளோடு விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகள் மாற்றம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article