திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து விபத்து: 15 பயணிகள் காயம்

2 hours ago 1

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்த விபத்தில் 15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மார்த்தாண்டம் சென்ற ஆம்னி பேருந்து யாகபுரம் என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. சுமார் 30அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்ததில்15 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

சுமார் 40 பயணிகளுடன் சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, திருச்சி-மதுரை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே யாகபுரம் பகுதியை பயணித்தது. அங்கே சாலை மேம்பால பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்ற. இதனால் வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியே சென்று நெடுஞ்சாலைக்கு திரும்ப வேண்டும். இதையடுத்து சர்வீஸ் சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் ஆம்னி பேருந்து, அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கி சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனாது.

மின் கம்பத்தில் மோதியதால் திடீரென தீப்பற்றிய நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் அலறியடித்து கொண்டு வெளியேறினார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று பேருந்தில் சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்க உதவினர். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் பயணிகளை மீட்டு தீ பற்றி எரிந்துகொண்டிருந்த பேருந்தை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து படுகாயம் அடைந்த பயணிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து விபத்து: 15 பயணிகள் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article