![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/26/35843482-annamalai33.webp)
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேலூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அங்கிருந்து மக்கள் வெளியேறும் நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த அரிட்டாபட்டி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார். அப்போது, நான் முதல்-அமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது என உறுதி அளித்தார்.இந்த நிலையில், பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மதுரைக்கு நான்கு வழிச்சாலை வழியாக பேரணியாக நடந்து வந்து போராட்டம் நடத்தியது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் அரிட்டாபட்டி பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கிராம மக்கள் பிரதிநிதிகள் 18 பேர், அமைச்சர் மூர்த்தியுடன் நேற்று சென்னைக்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து, அரிட்டாபட்டி மற்றும் அ.வல்லாளபட்டிக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
அதனை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, மதுரைக்கு பகல் 1 மணிக்கு வருகிறார். மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து முதல்-அமைச்சருக்்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து. அங்கிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில், அரிட்டாபட்டிக்கு சென்று மக்களை சந்தித்து பேசுகிறார். அ.வல்லாளபட்டியில் நடக்கும் நன்றி தெரிவிப்பு விழாவிலும் பேச உள்ளார்.
இந்தநிலையில், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை.
தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்சினை தொடங்கி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை உட்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளின் போது, அங்கு சென்று ஆறுதல் கூறாத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது, பாரதப் பிரதமர்
நரேந்திர மோடி அவர்கள், விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால், இந்த "டிராமா மாடல்" அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.