டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை மண்ணில் மாபெரும் சாதனை படைத்த ஆஸ்திரேலியா

15 hours ago 2

காலே,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டெஸ் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 257 ரன்களும், ஆஸ்திரேலியா 414 ரன்களும் எடுத்தன.

157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 231 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. குசல் மென்டிஸ் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் மேத்யூ குனேமேன், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 75 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. உஸ்மான் கவாஜா 27 ரன்னுடனும், லபுஸ்சேன் 26 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் ஆக்கியது.

இந்த போட்டியையும் சேர்த்து காலே மைதானத்தில் ஆஸ்திரேலியா கண்ட 5-வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதன் மூலம் இலங்கை மண்ணில் குறிப்பிட்ட மைதானத்தில் அதிக வெற்றிகளை பெற்ற வெளிநாட்டு அணி என்ற மாபெரும் சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தான் இதே காலேயில் 4 வெற்றி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முந்தியுள்ள ஆஸ்திரேலியா புதிய சாதனை படைத்துள்ளது.

Read Entire Article