சென்னை: திமுகவின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். திராவிட அறநெறியாளர் தமிழ்வேள் பி.டி.ராஜன் குறித்த `வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், நூலை வெளியிட்டு பேசியதாவது:‘வாழ்வே வரலாறு’ என்ற நூலை நீதிக்கட்சியின் வழித்தடத்தில் உருவான திமுக தலைவராக இருந்து வெளியிடுவதை என் வாழ்நாளில் கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.
1936-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த பி.டி.ராஜனின் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழகத்தின் முதல்வர் என்ற தகுதியோடு, அந்த பெருமையோடு வெளியிடுகிறேன். ‘பி.டி.ராஜனின் அரிய ஆலோசனைகளை நிறைவேற்றி வைக்கும் செயல் வடிவமாகத்தான் திமுக ஆட்சி திகழ்கிறது’ என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னார். அந்த வழித்தடத்தில்தான் நாமும் இன்றைக்கு பயணித்துக் கொண்டிருக்கிறோம். நான் அழுத்தந்திருத்தமாக சொல்கிறேன். திமுகவின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான்.