சென்னை: திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் தான் ஆளுநர் குறியாக இருக்கிறார். தமிழ்நாடு வளர்ந்து வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் ஏழாவது முறையும் திமுக ஆட்சி அமைக்கும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: முதலில் எல்லோருக்கும் என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தலைவர் கலைஞர் ‘பராசக்தி’ படத்தில் ஒரு வசனம் எழுதி இருப்பார், ‘இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைப் பார்த்திருக்கிறது’. அதேபோல் இந்தச் சட்டமன்றமும், ஆளுநரைப் பொறுத்தவரை சில ஆண்டுகளாக விசித்திரமான காட்சிகளைத்தான் காண்கிறது. ஆளுநர் வருகிறார், உரையாற்ற வருகிறார். ஆனால், உரையாற்றாமலேயே சென்றுவிடுகிறார். அதனால்தான் ஆளுநரின் செயல்பாடுகளை நான் சிறுபிள்ளைத்தனமானது என்று சொன்னேன். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 176 வரையறுத்துள்ளதின்படி, ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்ற வேண்டும். அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை, அப்படியே வாசிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை மரபு. ஆனால், திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் தான் ஆளுநர் குறியாக இருக்கிறார். 2021ம் ஆண்டு இப்போதிருக்கும் ஆளுநர், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2022ம் ஆண்டு இதே ஆளுநர், தன்னுடைய முதல் உரையை முழுமையாக வாசித்தார். எதையும் மாற்றவில்லை. ஆனால், இந்த மூன்றாண்டு காலமாக என்னென்ன அபத்தமான காரணங்களை எல்லாம் சொல்லி படிப்பதை தவிர்த்தார் என்று இந்த அவையில் இருக்கும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்! பேரவை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், அவை நடவடிக்கைகள் முடியும்போது நாட்டுப்பண் ஒலிப்பதும்தான் காலம் காலமாக பின்பற்றப்படும் மரபு. இந்த விளக்கத்தைச் சொன்ன பிறகும் அவர் உரையாற்ற மறுக்கிறார், தவிர்க்கிறார்! தமிழ்நாடு வளர்ந்து வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இன்றைக்கு முதல்வராக இருக்கும் நான், சாதாரணமானவனாக இருக்கலாம். ஆனால் இந்த சட்டமன்றம், நூற்றாண்டு வரலாறு கொண்ட சட்டமன்றம்; கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளால் உருவான சட்டமன்றம். இந்த சட்டமன்றத்தின் மாண்பையும் மதிக்காமல் – மக்களது எண்ணங்களுக்கும் மதிப்பு தராமல் தமிழ்த்தாய் வாழ்த்தையே அவமானப்படுத்த துணிந்ததன் மூலமாக, தான் வகிக்கும் பதவிக்கும் பொறுப்புக்கும் இழுக்கு ஏற்படுத்தும் காரியத்தை அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செய்வது இந்த மன்றம் இதுவரை காணாதது; இனியும் காணக் கூடாதது!
அவர் அரசியல் ரீதியாக எங்களைப் புறக்கணிப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஏனென்றால், திராவிட இயக்கம் என்பதே, புறக்கணிப்புகள்-அவமானங்கள்- ஒடுக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராக உதயமானதுதான்! இந்த இயக்கத்தின் மேல் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமைகளையும் மீறித்தான் நூற்றாண்டு கண்டிருக்கிறோம். ஒரு சமூகச் சீர்திருத்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி, ஆறாவது முறை ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு, திமுகவுக்கு தான் உண்டு. நிச்சயமாக சொல்கிறேன், ஏழாவது முறையும் ஆட்சி அமைத்து ஏற்றம் காணும் அரசாக திமுக அரசுதான் அமையப் போகிறது. அதற்கு அடித்தளமான இந்த ஆறாவது முறை ஆட்சி அமைந்தபோது, ‘‘இது விடியல் ஆட்சியாக அமையும்” என்று சொன்னோம். மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருட்டில் கிடக்கும் எதிர்க்கட்சிகள் ‘விடியல் எங்கே’ என்று கேட்கிறார்கள். விடியல் தரப்போவதாக சொன்னது மக்களுக்குத்தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு அல்ல. விடியலைப் பார்த்தால் அவர்களுக்கு கண்கள் கூசத்தான் செய்யும். அடுத்து, என்னுடைய கனவுத் திட்டமான ‘நான் முதல்வன் திட்டம்’. ‘‘எத்தனையோ தொழில்களைத் தொடங்குகிறீர்கள், அதிலே பணியாற்ற திறமைசாலிகளாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கித் தாருங்கள்” என்று சொன்னதை வைத்துதான், இந்தத் திட்டத்தை உருவாக்கினேன். இந்தத் திட்டத்தில் இதுவரைக்கும் 22 லட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி தரப்பட்டிருக்கிறது. பயிற்சி பெற்ற, பல இலட்சம் மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோரையும் ஒவ்வொரு துறையில், இந்தத் திட்டம் முதல்வனாக ஆக்கி வருகிறது. இதுதான் விடியல் ஆட்சி! அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர், கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றி உயர் கல்வி பயில உருவாக்கப்பட்ட திட்டம்தான், புதுமைப் பெண் திட்டம். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய இந்தத் திட்டம் மூலமாக மாணவிகள் கல்லூரிக்கு வருவது 30 விழுக்காடு அதிகமாகியிருக்கிறது. இதேபோல, தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். மாதந்தோறும் 2 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியர் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தியிருக்கிறோம். அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல, அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் படித்தவர்களுக்கும் புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறோம்.
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ஒரு மாணவி பேசினார், ‘‘என் குடும்ப வறுமை காரணமாக கல்லூரிக்குப் போய் படிக்க முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. பணம் இல்லை, அதனால் வேண்டாம் என்று என் அம்மா சொல்லிவிட்டார். புதுமைப் பெண் திட்டத்தைக் கேள்விப்பட்டு, என் கல்லூரிச் செலவை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதும், என் அம்மா சம்மதம் தெரிவித்தார். ஆனால், தினமும் பஸ்ஸில் போக வேண்டுமே என்று அவர் சொன்னார். அதற்குத்தான் விடியல் பயணம் இருக்கிறதே என்று நான் சொன்னேன். ஆக, இரண்டு திட்டங்களையும் பயன்படுத்தி நான் தற்போது படித்துக்கொண்டு வருகிறேன்” என்று அந்த மாணவி சொன்ன சொற்கள்தான், விடியலுக்கான சாட்சி! அதனால்தான், தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை ‘அப்பா, அப்பா’ என்று வாய்நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், இந்தப் பாச உணர்வுதான் முக்கியம்! ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்றொரு திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். போதிய சத்து இல்லாமல் பிறக்கிற குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மூலமாக தீவிர ஊட்டச்சத்து உணவு வகைகள் வழங்கப்பட்டன. அதில், தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாகக் கண்டறியப்பட்ட குழந்தைகளில் 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள 6 மாதத்திற்குட்பட்ட 76 ஆயிரத்து 705 பச்சிளம் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுடைய பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் அவர்கள் வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டன. இதனால்தான், குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்திருக்கிறார்கள்.
அதன்கீழ் பயனடைந்த ஒரு தாய், “என் குழந்தை பிறந்தபோது மிகமிகக் குறைவான எடையோடுதான் பிறந்ததது. என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்தேன். அதை வளர்க்கிற அளவுக்கு என்னிடம் பண வசதி இல்லை. முதலமைச்சரின் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தால் நிறைய பொருட்கள் கிடைத்தன. அதன் மூலமாக என் குழந்தை இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்திருக்கிறது” என்று சொன்னார். அந்தத் தாயின் கனிவான வார்த்தைகளில் விடியல் தெரிகிறது! பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். தினந்தோறும் காலையில் 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவ, மாணவியர் வயிறார காலை உணவு சாப்பிடுகிறார்கள். அந்தத் திட்டத்தை தொடங்கியபோது, காலை உணவு சாப்பிட்ட பிள்ளைகளின் முகங்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்தபோது, எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! இந்தத் திட்டத்தைப் பற்றி மதுரை மாணவி ஹரிணி சொல்லியிருந்த காட்சியை நான் வீடியோவில் பார்த்தேன். அவர், “நான் தினமும் காலையில் சாப்பிட மாட்டேன். ஆட்டோ வந்ததும் ஓடி வந்து ஏறிவிடுவேன். சாப்பிடாமல் வருவதால் ஸ்கூலுக்கு வந்ததும் தண்ணி குடித்துக்கொள்வேன். ஆனால், இப்போது கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவற்றைக் கொடுப்பதனால் தெம்பாகப் படிக்கிறேன்” என்று சொன்னதைக் கேட்டபோது, நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்காக மிகமிக பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தேன்! இவைதான் விடியலின் சாட்சியங்கள்! இப்படி நான் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி ஒவ்வொரு திட்டத்தையும் சொல்லத் தொடங்கினால் எதிர்க்கட்சியினர் அதிகமான வேதனையை அடைவார்கள் என்பதால் கொஞ்சம் குறைத்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் குறியாக இருக்கும் ஆளுநர் தமிழக வளர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.