தாயால் கைவிடப்பட்ட யானை குட்டி தெப்பக்காடு முகாமில் சேர்ப்பு

16 hours ago 4

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை வனப்பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் சுமார் ஒரு மாதமே ஆன ஒரு ஆண் காட்டு யானைக் குட்டி தாயை பிரிந்த நிலையில் தனியாக தவித்து வந்தது. இதையடுத்து, அந்த யானையை மீட்ட மதுக்கரை வனத்துறையினர், வன கால்நடை மருத்துவ அலுவலரின் ஆலோசனையின் படி மருத்துவ உதவிகள் செய்து, தேவையான உணவுகளை வழங்கினர்.

இதையடுத்து அந்த யானை குட்டியின் தாய் யானையை கண்டறிந்து, அதனுடன் சேர்ப்பதற்கான முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டனர். அப்போது, வனப்பகுதிக்குள் சுற்றி திரிந்த ஒரு பெண் யானையுடனும், மற்ற யானை கூட்டங்களுடனும் குட்டி யானையை வனத்துறையினர் சேர்த்து வைக்க முயன்றனர். ஆனால், ஐந்து முறைக்கு மேல் வனத்துறையினர் தொடர்ந்து சேர்த்து வைத்த நிலையில், யானை குட்டியை காட்டு யானைகள் ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்து வந்தன.

இதனால், யானை குட்டியின் வயதினையும், கடுமையான வெப்பநிலையையும் கருத்தில் கொண்டு உயரதிகாரிகள் ஆலோசனைப்படி, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு யானை குட்டி நேற்று கொண்டு செல்லப்பட்டது.

The post தாயால் கைவிடப்பட்ட யானை குட்டி தெப்பக்காடு முகாமில் சேர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article