
சென்னை,
கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஹாரர் படங்கள் அதிக அளவில் வசூல் செய்துள்ளன. அதன்படி, 'ஷைத்தான்', 'முஞ்யா', 'ஸ்ட்ரீ 2' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த சூழலில், இதுவரை ஹாரர் படத்தில் நடிக்காத நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தற்போது அதன் பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, ஸ்ட்ரீ 2, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு 'தாமா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'முஞ்யா' இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் இயக்கவுள்ள இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், 'தாமா' படப்பிடிப்பு குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் ராஷ்மிகா. இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது, அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேர படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்திருக்கிறார்.