தயார் நிலையில் ஏவுகணைகள்.. டிரம்பின் குண்டுவீச்சு மிரட்டலுக்கு ஈரான் பதிலடி

1 day ago 5

தெஹ்ரான்:

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவ்வகையில் அணு ஆயுத உற்பத்தி விவகாரத்தில், ஈரான் மீது கடும் அழுத்தம் கொடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் அணு ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு தடைவிதிக்கும் விதமாக புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி ஈரானுக்கு டிரம்ப் கடிதம் எழுதியிருந்தார். அதில் அமெரிக்காவுடனான நேரடி ஒப்பந்தத்திற்கு ஈரான் முன்வரவேண்டும் என கூறியிருந்தார். அமெரிக்காவுடனான ஒப்பந்தத்துக்கு மறுப்பு தெரிவித்தால் ஈரான் மீது கடுமையான தடைகள் விதிக்கப்படும் எனவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

டிரம்பின் இந்த கடிதத்துக்கு பதில் அளித்த ஈரான் நாட்டின் அதிபர் மசூத் பெசஸ்கியான், 'அமெரிக்கா உத்தரவுகள் வழங்குவதையும், எச்சரிக்கை விடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஒருபோதும் உங்களிடம் (அமெரிக்கா) நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். அதேசமயம் மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்' என்று பதிலடி கொடுத்தார்.

மேலும் ஓமன் மூலமாக ஈரான் அரசாங்கம் டிரம்புக்கு பதில் கடிதமும் அனுப்பி உள்ளது. அதில், அதிகபட்ச அழுத்தம் மற்றும் ராணுவ அச்சுறுத்தல்களின் கீழ் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது என்பதே தங்கள் நாட்டின் கொள்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்தது, டிரம்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தொலைபேசி வாயிலாக ஒரு செய்தியாளருக்கு பேட்டி அளித்த டிரம்ப், 'அவர்கள் (ஈரான்) எங்களுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், குண்டு வீசி தாக்குவோம், அவர்கள் இதற்கு முன்பு கண்டிராத வகையில், இந்த தாக்குதல் இருக்கும்' என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செய்தது போல் நான் அவர்களுக்கு இரண்டாம் நிலை வரிகளை விதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் டிரம்ப் கூறினார்.

டிரம்ப் இவ்வாறு கூறிய சில மணி நேரங்களில் ஈரான் தனது செயல்பாடுகள் மூலம் பதில் அளித்துள்ளது. அதாவது ஏவுகணைகளை தயார்நிலையில் வைக்கத் தொடங்கியிருக்கிறது.

உலகெங்கிலும் அமெரிக்காவுடன் தொடர்புடைய நிலைகளை குறிவைத்து தாக்கும் திறனைக் கொண்ட ஏவுகணைகளை ஈரான் ராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளதாக அரசு ஊடகமாக தெஹ்ரான் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஏவுதலுக்கு தயார்நிலையில் உள்ள ஏவுகணைகளில் பெரும்பாலான ஏவுகணைகள், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள நிலத்தடி வசதிகளில் அமைந்துள்ளன என்றும், அவை வான்வழித் தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவும் ஈரானும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. 

Read Entire Article