தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் : அரசு தகவல்

2 hours ago 3

சென்னை : டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மலைபிரதேசங்களில் மதுபாட்டில்களை வீசிச் செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு ரூ.10 திருப்பிக் கொடுக்கவும் வகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுலா தலங்களில் மது கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக டாஸ்மாக் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், “9 மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் பகுதி வாரியாக அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 97 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பெற்ற பணத்தை நீர்நிலை, வன மேம்பாட்டுக்காக பயன்படுத்தலாம். ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த அரசு வழக்கறிஞர்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்,”என்று தெரிவித்தனர். மேலும் பாட்டில்களின் மூடியை மாற்றுவதா? அல்லது திரும்பப் பெறுவதா? என அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்தது.

The post தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் : அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article