
புதுடெல்லி,
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் தொடங்கியது.
அப்போது அரசியல் சாசன பிரிவு 200 குறித்த விரிவான வாதங்களை ராகேஷ் திவேதி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தார்.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, "காரணம் எதுவும் தெரிவிக்காமல் மசோதாக்களை கவர்னர் நிறுதிவைத்துள்ளார். ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இது எப்படி முடியும்..?. மசோதாக்களை நிறுத்தி வைத்த பின்னர், பிறகு எப்படி ஜனாதிபதி பரிசீலனைக்கு மசோதாக்களை அனுப்ப முடியும்..?
கவர்னர் முடிவெடுக்காமல் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது செல்லாது என முன்னர் வாதம் வைத்தீர்கள், அப்படியெனில் செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு முடிவுக்கு எப்படி அனுப்ப முடியும் ? என்று கவர்னர் தரப்பிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பு வாதிடுகையில், "பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வு குழுவில் கவர்னர் தலையிட்டு தடுக்கிறார். எனவே வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கும் வகையில் திருத்த மசோதா இயற்றப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார் " என்று வாதிடப்பட்டது.
அப்போது, மசோதா மீது கவர்னர் எடுக்கும் முடிவு வெளிப்படையாக மாநில அரசுக்கு ஏன் தெரிக்கப்படவில்லை..? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கவர்னர் தரப்பு விளக்கம் அளிக்கையில், "துணைவேந்தர் நியமனத்தில் கவர்னரை நீக்குவது என்ற முடிவு, கவர்னரின் அதிகாரத்தை பறிக்கும் செயல். அதிகாரம் அனைத்தையும் மாநில அரசே வைத்து கொள்ள வேண்டும் என்பதே அதன் அர்த்தம்" என்று தெரிவிக்கப்பட்டது.