சென்னை: இலக்கை விட மூன்று மடங்கு அதிகமாக தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளதால் மேலும் சுகாதார நிலையங்கள் கேட்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு கூறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, வாணியம்பாடி செந்தில்குமார் (அதிமுக) பேசுகையில்,‘திம்மாம் பேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கபடுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ஒன்றிய அரசின் இலக்கின்படி, 30,000 மக்கள்தொகைக்கு ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இரண்டு சுகாதார மையங்களுக்கு இடையே குறைந்தபட்ச இடைவெளி 8 கிலோ மீட்டருக்கு மேல் இருத்தல் வேண்டும் என்ற நியதியின் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. திம்மாம்பேட்டை கிராம மக்கள்தொகையைப் பொறுத்தவரையில், 6,279 பேர் உள்ளனர். இக்கிராமத்தில் துணை சுகாதார நிலையம் ஒன்று பயன்பாட்டில் இருக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், டெல்லியில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, தமிழகத்தில் 50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து எடுத்துக் கூறியிருக்கிறோம். ஒன்றிய அரசு அனுமதிக்கும்பட்சத்தில் அவர் கோருகின்ற இடத்தில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். (இதேபோன்று திருத்துறைப்பூண்டி மாரிமுத்து(இந்திய கம்யூனிஸ்ட்) தனது தொகுதியிலும் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்)
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: நான் ஏற்கெனவே சொன்னது போன்று, தமிழகத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. நாம் ஒன்றிய அரசைக் கேட்கிற போது, வட இந்தியாவைக் காட்டிலும் 3 மடங்கு ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் உள்ளது. எனவே, இலக்கை தமிழ்நாடு முழுமையாக எட்டிவிட்டதால், இனிமேல் புதிதாக கேட்காதீர்கள் என்று சொல்கிறது. எனினும், இந்த ஆண்டும் 50 எண்ணிக்கையில் கேட்டிருக்கிறோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post தமிழகம் இலக்கை எட்டிவிட்டதால் கூடுதலாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி தர மறுக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.