கோவை: கோவையில் கனிமவளக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், திமுக நகராட்சி தலைவரின் மகனே கனிமவளக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மதுக்கரை, செட்டிபாளையம், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. இங்கிருந்து கற்களை வெட்டியடுத்து கருங்கற்களாகவும், கிரானைட் கற்களாகவும், சிறு சிறு ஜல்லிக் கற்களாகவும், பி.சாண்ட், எம்.சாண்ட் ஆகவும் மாற்றி, அனுப்பிவைக்கின்றனர். இந்நிலையில், குவாரிகளில் அரசின் விதிகள் மீறப்படுவதாகவும், கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.