
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் அண்ணா துரை, தொழிலதிபர். இவருடைய மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமார் (27) ஆகியோருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி தனது சாவுக்கு தனது கணவர், மாமனார், மாமியார் காரணம் என உருக்கமாக பேசிய ஆடியோ பதிவு தமிழகத்தையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வர மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் 3-வது குற்றவாளியாக ரிதன்யாவின் மாமியாரை கைது செய்யக்கோரியும், ரிதன்யாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. தொடர்ந்து இந்த வழக்கில் கவின்குமாரின் தாயார் சித்ராதேவியை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் அவினாசி அனைத்து ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள், வணிக சங்கத்தினர் ஆகியோர் சார்பில் இன்று அவினாசி புதிய பேருந்து நிலையம் அருகே ரிதன்யாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து ரிதன்யாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.