
சென்னை,
மானாமதுரை தி.மு.க. எம்.எல்.ஏ. தமிழரசி, 'கடந்த ஆட்சியில் பழுதடைந்த அரசு பேருந்துகள் எல்லாம் எனது தொகுதியைச் சுற்றிலும் இயக்கப்படுகின்றன. அந்த பழுதடைந்த பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சட்டசபையில் நேற்று பேசினார்.
இதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், 'போக்குவரத்துத் துறைக்கு புத்துயிர் ஊட்டுகின்ற வகையில் முதல்-அமைச்சர், ஒவ்வொரு வருடமும் புதிய பஸ்களை வாங்க அறிவிப்பு கொடுத்து, அதற்கான டெண்டர் விடப்பட்டு, தற்போது தமிழ்நாடு முழுவதும் 3,500 பஸ்கள் மக்களுடைய பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
மீதி பஸ்கள் படிப்படியாக தயாரிக்கப்பட்டு, கூடு கட்டும் பணி முடிவு பெற்று வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரத்திலும் புதிய, புதிய பஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. பழைய பஸ்கள் அவற்றின் மூலமாக மாற்றி இயக்கப்படும்' என்றார்.