தமிழக வளர்ச்சியும் சமூகநீதியும் தான் நோக்கம்: தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

1 week ago 5

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

உலகில் சொன்ன உடனேயே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் மனதில் நிறைக்கச் செய்யும் திறன் சில நிகழ்வுகளுக்கு மட்டும் தான் உண்டு. அவற்றில் ஒன்று தான் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு ஆகும். தமிழகத்தின் வரலாற்றில் பதிவாகப் போகும் இந்த பெருவிழாவை அனைவரும் வியக்கும் வண்ணம் பிரமாண்டமாகவும், அதே நேரத்தில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் இந்த கடிதத்தை பாட்டாளி சொந்தங்களுக்கு நான் எழுதுகிறேன்.

மாநாடுகளை நடத்துவதும், அதன் மூலம் மகத்தான சாதனைகளைப் படைப்பதும் நமது வரலாறுகள். மாமல்லபுரத்தில் வரும் 11-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவும் அந்த வரலாற்றின் ஓர் அங்கமாக மாறப் போகும் நிகழ்வு தான். 1988-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சித்திரை முழுநிலவு நாள் வன்னிய இளைஞர் பெருவிழா இதுவரை 20 முறை நடத்தப்பட்டிருக்கிறது. இப்போது நடைபெறவிருக்கும் 21-ம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டை முன்னின்று நடத்தும் மிகப்பெரிய வாய்ப்பை, மாநாட்டுக்குழுத் தலைவராக நியமித்ததன் மூலம் மருத்துவர் அய்யா அவர்கள் எனக்கு வழங்கியிருக்கிறார். அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதலாக ஒவ்வொரு நாளும் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக களத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன். இதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு குழுவினரும் எனக்கு துணையாக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாநில அளவில் தொடங்கி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகரம், பேரூர், கிளை நிர்வாகிகள் வரை அனைவரும் அவரவர் நிலையில் மாநாடு சிறப்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த மாநாட்டை மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலுடன் நடத்திக் கொண்டிருக்கிறோம். மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டை நாம் நடத்துவதன் நோக்கம் நமது வலிமையைக் காட்டுவது அல்ல. மாறாக, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகநீதிக்கும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் தேவையான திட்டங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையாக முன்வைத்து நிறைவேற்றச் செய்வது தான். அதனால் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; அதனடிப்படையில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; தேசிய, மாநில அளவில் இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும்; கிரீமிலேயர் முறை கூடாது; மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்க வேண்டும்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் மிகவும் பின்தங்கியிருக்கும் வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவை இந்த மாநாட்டின் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

நாம் முன்னேறினால் மட்டும் போதாது, சமூகநிலையிலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள அனைத்து சமுதாயங்களும் முன்னேற வேண்டும் என்பது தான் நமது உன்னத நோக்கம் ஆகும். மாநாட்டுக்கான நமது கோரிக்கைகளும் அந்த நோக்கத்தைச் சார்ந்தே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டின் சிறப்பு என்று நாம் போற்றக்கூடிய 69% இட ஒதுக்கீட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அந்த ஆபத்தை தகர்க்க வேண்டும் என்றால் நமது கோரிக்கைகள் வெல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், வஞ்சிக்கப்பட்ட மக்கள், புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் கல்வியில் சிறந்து, கவுரவமான வேலைவாய்ப்பைப் பெறும் போது உண்மையான சமூக விடுதலை கிடைக்கும். அத்தகைய சமூக விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக நாம் மேற்கொள்ளும் சமூகநீதிப் போர்களில் ஒன்று தான் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு ஆகும். மாநாட்டில் மட்டுமின்றி, மாநாட்டுக்குப் பிறகும் இந்தக் கோரிக்கைகளுக்காக நமது போராட்டம் தொடரும். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், சமூகநீதியையும் அடிப்படையாகக் கொண்ட இந்த மாநாட்டிற்கு கிடைக்கும் வெற்றி தான் நமது சமூகநீதி லட்சியங்களை வென்றெடுப்பதற்கு அடித்தளமாக அமையும் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். அந்த வகையில் மாமல்லபுரம் மாநாட்டை வெற்றி பெறச் செய்யும் வகையில், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள அனைத்து பாட்டாளி சொந்தங்களும் தங்கள் குடும்பத்துடன் திரண்டு வர வேண்டும்.

மாமல்லபுரம் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற நமது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு இருக்கிறது. இது மருத்துவர் அய்யா அவர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி ஆகும். இதில் கிடைத்த வெற்றியைப் போலவே, மாமல்லபுரம் மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடையப்போவது உறுதி. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வரும் செய்திகள் அதைத் தான் சொல்கின்றன. மே மாதம் 11-ம் நாள் மட்டும் வங்கக்கடலை விஞ்சும் அளவுக்கு வன்னிய மக்கள் கடல் பெருக்கெடுக்கப் போகிறது. அலைகடலென திரண்டு வாருங்கள் என்ற அழைப்புக்கு உண்மையான பொருளை மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு தான் தமிழகத்திற்கு வழங்கப் போகிறது.

அதே நேரத்தில் நமது மாநாடு எந்தவித விமர்சனத்திற்கும் ஆளாகிவிடக் கூடாது என்பதையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் ராணுவத்திற்கு இணையான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பவர்கள் என்பதை நிரூபிக்க இந்த மாநாடு ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும். இந்த மாநாட்டையொட்டி சிறு சலசலப்பு கூட ஏற்படக்கூடாது. அதற்கு நீங்கள் இடம் தந்துவிடக்கூடாது.

மாநாடு தொடர்பாக காவல் துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். மாநாட்டுக்கு வரும் பாதையிலும், மாநாடு முடிந்து திரும்பும் போதும் உணவகங்கள் திறந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், வரும் போதே இருவேளைக்கான உணவு, குடிநீர் ஆகியவற்றை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து கொண்டு வர வேண்டும். அதேபோல், வாகனங்களை அதிவேகமாகவும், ஆபத்தான வகையிலும் இயக்குவதைத் தவிர்க்க வேண்டும். மாநாட்டுக்கு வரும் கடைசி தொண்டன் வரை அனைவரும் மாநாடு முடிவடைந்து பாதுகாப்பாக வீடு திரும்பி விட்டார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்த பிறகு தான் நான் உறங்குவேன்.

அதனால், இந்த மாநாடு தொடர்பான அனைத்து விஷயங்களையும் கண்ணாடிப் பொருள் போன்று அனைவரும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் கையாள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றி பெறச் செய்யவும், சமூகநீதிக்கான கோரிக்கைகளை வென்றெடுக்கவும் உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் அமைதி, கட்டுப்பாட்டுடன் அணிவகுத்து வரும்படி மீண்டும் ஒரு முறை அழைக்கிறேன். உங்களுக்காக மாநாட்டுத் திடலில் வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பேன்... வாருங்கள் சொந்தங்களே!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Read Entire Article