
சென்னை,
தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. வீர தீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு ரூ. 5,00,000/-ரொக்கப்பரிசுடன் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் விருதாளருக்கு வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் 16.05.2025 முதல் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கல்பனா சாவ்லா விருது பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள் :
· தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
· தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களை புரிந்திருக்க வேண்டும்.
· விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலம் (மருதம்) (வர்டானா) மொழிகளில் 16.05.2025 முதல் 16.06.2025 வரை பதிவு செய்ய வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சென்று ஒப்படைக்க வேண்டியவை :
· விண்ணப்பதாரரின் கருத்துரு (Booklet - 4) தமிழ்-2. ஆங்கிலம்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
· பக்கம் எண்ணுடன் கூடிய உள்ளடக்க அட்டவணை (Index)
· விண்ணப்பதாரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் -2
· இணைப்பு - படிவம் I & II, தமிழ் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலம் முழுவதுமாக பூர்த்தி செய்திருக்க வேண்டும்.(Soft copy & Hard copy)
· தைரியம் மற்றும் துணிச்சலுடன் மேற்கொண்ட அனுபவத்தை பற்றி ஒரு பக்கம் எழுத்து விளக்கம்.
· படிவம் | மற்றும் || முழுமையாக நிரப்பப்பட வேண்டும் (தமிழில்- மருதம் எழுத்துரு, ஆங்கிலத்தில் - வர்டானா எழுத்துரு)
எனவே, அனைத்து மாவட்டங்களிலும், துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கிட ஏதுவாக, இணையதளத்தின் மூலம் வருகின்ற 16.06.2025-க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுகிறது.